நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,93,706 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக, வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி/தனி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கடந்த 7ம் தேதி துவங்கி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம் (எஸ்ஐஆர்) நடைபெற்றது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைத்து வாக்காளர்களுக்கும், வீடு வீடாகச்சென்று எஸ்ஐஆர் படிவங்களை கொடுத்தனர். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இறந்த வாக்காளர்கள், இடம் மாறிச் சென்றவர்கள் மற்றும் கண்டறிய முடியாதவர்களின் எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்ய முடியவில்லை.
எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிக்குமான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்த மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்கள் 7,08,585, பெண்கள் 7,57,812, இதரர்கள் 263 என மொத்தம் 14,66,660 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
எஸ்ஐஆர் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு தற்போது உள்ள வாக்காளர்கள் விபரம் ஆண்கள் 6,17,269, பெண்கள் 6,55,490, இதரர்கள் 195 என மொத்தம் 12,72,954 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எஸ்ஐஆர் திருத்தத்தின்போது இறந்த வாக்காளர்கள் 66,312, வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் 1,00,201, இருமுறை பதிவு செய்துள்ளவர்கள் 8,636, கண்டறிய முடியாதவர்கள் 18,023, மற்றவை 534 என மொத்தம் 1,93,706 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில் உள்ளது. இது ஏற்கனவே இருந்த மொத்த வாக்காளர்களில் 13.21 சதவீதமாகும்.
அதிகபட்சமாக குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் 20.07 சதவீத வாக்காளர்களும், குறைந்த பட்சமாக ராசிபுரம் தொகுதியில் 8.91 சதவீத வாக்காளர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதன் விபரங்கள் தொகுதி வாரியாகவும், பாகம் வாரியாகவும் நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
எஸ்ஐஆர் திருத்ததத்திற்குப்பிறகு ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நகரப்பகுதியில் ஏற்கனவே 576 ஓட்டுச்சாவடிகள் இருந்தன, தற்போது 691 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஊரகப் பகுதிகளில் ஏற்கனவே 1,053 ஓட்டுச்சாவடிகள் உள்ளன தற்போது 1,089 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து ஏற்கனவே 1,629 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது 1,780 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே சராசரியாக ஒரு ஓட்டுச்சாவடிக்கு 900 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது சராசரியாக ஒரு ஓட்டுச்சாவடிக்கு 715 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விபரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். இதில் மாற்றம் தேவைப்படின், தங்களது கோரிக்கைகளை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து, இம்மாதம் 19ம் தேதி முதல் வருகிற ஜன. 18ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம். இதற்காக கூடுதலாக 120 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனுக்களின் மீது விசாரணை நடத்துவார்கள்.
வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், படிவம் 6-ல் உறுதிமொழி படிவம் இணைந்து தேவையான ஆவனங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், தங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




