Close
மார்ச் 7, 2026 1:18 மணி

புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை, பட்டியலில் சேர்ப்பது குறித்து, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற தவறிய வாக்காளர்களுக்கு தற்போது நோட்டீஸ் வழங்கி, கூடுதல் ஆவணங்கள் பெற்று தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பணியில் விசாரணை அலுவலர்களாக ஒரு சட்டசபை தொகுதிக்கு 20 நபர்கள் வீதம், 120 கூடுதல் வாக்காளர் பதிவு அலுவலர்களாக, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும், ஓட்டுச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்வதோடு, தங்களது சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும், புதிய வாக்காளர்களை சேர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக, ஆட்சியர் தலைமையில் எஸ்ஐஆர் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் முருகன், சுந்தரராஜன், சாந்தி, லெனின், கிருஷ்ணவேணி, சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், பிடிஓக்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top