சிறப்பு முகாம்களில் பெறப்படும் எஸ்ஐஆர் படிவங்களுக்கு, விரைவில் தீர்வுகாண வேண்டும் என, தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ராகுல்நாத் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, 2002 வாக்காளர் பட்டியலுடன் தொடர்புபடுத்த இயலாத வாக்காளர்களை விசாரணை செய்து விரைவில் முடிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை விசாரணை செய்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து, பள்ளிபாளையம் ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் மற்றும் சாணார்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, விட்டலபுரி ஜே.கே.கே.ரங்கம்மாள் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட வழங்கல் மற்றும் அலுவலர் முருகன், சப்கலெக்டர் சுந்தரராஜன், ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின் உள்பட பலர் பங்கேற்றனர்.




