திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாக்களை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடந்து வருகின்றன.
திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தகத் திருவிழா (14ம் தேதி) தொடங்கி, வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசான்ய மைதானத்தில் புத்தக திருவிழா தொடங்கியது. அதையொட்டி, பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு கூடங்கள், அரசு துறை அரங்குகள் என தினமும் காலை 10 மணி முதல் இரவு வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% கழிவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை புத்தக திருவிழாவை நேற்று மாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், எம்பிக்கள் ண்ணாதுரை, தரணிவேந்தன், மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசுகிறார்.
வரும் 16ம் தேதி எழுந்தாளர் பவா.செல்லதுரை, வரும் 17ம் தேதி கவிஞர் மனுஷ்யபுத்திரன், வரும் 18ம் தேதி எழுத்தாளர் அழகியபெரியவன், வரும் 19ம் தேதி கவிஞர் நெல்லை ஜெயந்தா, வரும் 20ம் தேதி பேச்சாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், 21ம் தேதி எழுத்தாளர் எஸ்கேபி கருணாநிதி, 22ம் தேதி, திரைப்பட இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார், ஆகியோர் பேசுகின்றன்.
மேலும், வரும் 23ம் தேதி 1000 பேருக்கு புத்தங்களை வழங்கி வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இங்கிருந்தும் தொடங்கலாம் எனும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசுகிறார். நிறைவாக 24ம் தேதி எழுத்தாளர் முத்துவேல் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.