Close
மே 30, 2025 4:27 மணி

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில்  நடைபெற்றது.  தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலா் செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், மக்களவை உறுப்பினா்கள் அண்ணாதுரை (திருவண்ணாமலை), தரணிவேந்தன் (ஆரணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க 5 முனைத் திட்டம் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கொண்டை ஊசி வளைவுப் பகுதி சீரமைப்பு, பள்ளத்தாக்கு, மலைச் சாலைகளில் விபத்தை தவிா்க்க நவீன ‘ரோலா் கிராஷ் பேரியா் தொழிற்நுட்பம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்ளது.

சாலைப் பணி நடைபெறும் இடங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் ஒளிரும் விளக்கு (பிளிங்கா்) அமைத்து இரும்புத் தடுப்புகளை வைக்கவேண்டும். தடுப்புகளை அடையாளப்படுத்தி, அதற்குரிய ஒளிரும் வண்ணம் தீட்டவேண்டும்.

இதுபோன்ற சாலைப் பணிகளை மேற்கொள்ள 355 பொறியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. காவல்துறை சாா்பில் கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க வேண்டும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

மேல்மருவத்தூரில் கடந்த 2021-ஆம் டிசம்பா் 18-ஆம் தேதி நம்மை காக்கும்-48 என்ற திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 2025 மே 5 வரை மொத்தம் 723 மருத்துவமனைகள் மூலம் 3,72,607 பேருக்கு ரூ.335 கோடியே 91 லட்சத்து 14 ஆயிரத்து 837 செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மருத்துவமனைகள் மூலம் 15,630 பேருக்கு ரூ.9 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 927 செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரை 556 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 182 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

இருவழிச் சாலை

கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுமாா் 135 கி.மீ. தொலைவுக்கு ரூ.925 கோடியில் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

பாராட்டுச் சான்றிதழ்கள்,

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்ட அமைச்சா் எ.வ.வேலு, சாலைப் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட போக்குவரத்துக் காவல் துறையினா், அரசு, தனியாா் பள்ளி மாணவ-மாணவிகள், அவசர ஊா்தி ஓட்டுநா்கள், தனியாா் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநா்கள், போக்குவரத்துத் துறையினா் உள்ளிட்ட 41 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், வருவாய் அலுவலா் இராம் பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளா் (தேசிய நெடுஞ்சாலைகள்) பன்னீா் செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top