நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட, நாமக்கல் ஆட்சியர் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபரதாம் விதிக்க உத்தரவிட்டார்.
நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம்மைக்குட்டைமேடு, செல்லப்பம்பட்டி, புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் நடைபெற்று வருகிறது. அதை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அதையடுத்து, மேம்பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை, நாமக்கல் ஆட்சியர் உமா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவ்வழியாக டூ வீலர்களில் சென்றவர்கள் லைசென்ஸ் இல்லாமலும், வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். நாமக்கல் தெற்கு ஆர்டிஓ முருகேசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம், எஸ்.ஐ. வெங்கடேஷ் ஆகியோர் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச்சென்றோர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
அதன்படி, 25 வாகனங்களுக்கு தலா ரூ. 1,000 ரூபாய் மொத்தம் 25,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது. பின்னர், மோகனூர் தாலுகா, எம்.மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், புதிய வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.




