எத்தனால், மெத்தனால் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பி., தனராசு தலைமையில், நாமக்கல் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும், கெமிக்கல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரசாயனங்களை விற்பனை செய்யும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் அருகே, ராயல்டி பெயிண்ட் இன்டஸ்டிரீஸ் என்ற நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரசாயனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அவை எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
தொடர்ந்து. ரசாயனங்களை விற்பனை செய்வோர் அதை வாங்குவோரின் விபரங்களை முறையாக பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமான பயன்பாட்டிற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டாலோ, விற்பனை செய்தாலோ, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறையினர் கூறினர்.