நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓக்கள் தலைமையில் வருகிற 20ம் ததி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் இந்த கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.