Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விபரம்:

நல்லா கவுண்டர் (மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்): தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குற¬ந்துள்ளது. கரும்பு நடவு செய்வதற்கு, நான்கடி பார் அமைப்பதற்கு, சொட்டுநீர் பாசனம் அமைக்கின்றனர். அதற்கு மானியம் வழங்க வேண்டும்.

ராஜேந்திரன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்): பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், பால் விலை உயர்த்தினால், விற்பனை விலை உயர்த்த வேண்டும். அதனால், நுகர்வோர் பாதிக்கப்படுவர். எங்களுக்கு சட்டசபை தேர்தல்தான் முக்கியம் என, துறை அமைச்சர் தெரிவிக்கிறார். எங்கள் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக லிட்டருக்கு 56 பைசா கிடைக்கும் வகையில் பால் பதப்படுத்தும்போது, எம்ஆர்எப் பார்முலாவிற்கு பதிலாக ஐஎஸ்ஐ பார்முலாவை அமல்படுத்த வேண்டும்.

பாலசுப்ரமணியம், (பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்): மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, 2023&24 அரவை பருத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, கிரைய தொகை, ரூ. 23.40 கோடி நிலுவை உள்ளது. அரவை முடிந்து, 3 மாதமாகியும் நிலுவைத்தொகையை வழங்காததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

லாபத்தில் இயங்கிய சர்க்கரை ஆலை, தற்போது ரூ. 23 கோடி நஷ்டத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு கிரையத்தொகை வழங்க, அரசிடம், வழி வகை கடன் பெற்று உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க வட்டாட்சியர் அனுமதி அளித்தும், அந்த ஆர்டரை, வட்டார வளர்ச்சி அலுவலர் கிடப்பில் போட்டுள்ளார்.

சுமன், (டி.ஆர்.ஓ.,): இது சீரியசான பிரச்னை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கும் மனுக்கள் எதுவும் நிராகரிக்கக்கூடாது. வட்டாட்சியர் உத்தரவை நிறுத்தி வைக்க யார் அனுமதி அளித்தது?. உடனடியாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

குமரேசன், (விவசாயி): தேசிய பறவையான மயில், மலைப்பகுதி ஓரங்களில் பல்கி பெருகி, பயிர்களை சேதம் செய்து வருகிறது. விளை பொருட்களை சேதப்படுத்தும் மயில்களை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மயில்களுக்கு கருத்தடை செய்து அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், மயில்களுக்கு சரணலாயம் அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நீடித்தது.

இந்நிகழ்ச்சியில் திரளான அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top