காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, சங்க மாநில துணைத் தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக துறை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக செல்போன் வழங்காத 22 மாவட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன் வழங்க வேண்டும். பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
சங்க மாவட்ட துணைத் தலைவர் குர்ஷித்பேகம், துணை செயலாளர்கள் அனுராதா, அம்பிகா, துணைத் தலைவர் ஜமுனா உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.