Close
மார்ச் 7, 2026 4:46 மணி

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம்

மாவட்ட கலெக்டர் உமா

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் தொழில் செய்வதற்காக, வணிக ரீதியிலான கிரைண்டர்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000- மானியத் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.

திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற ஜூலை 14ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top