Close
ஏப்ரல் 24, 2026 12:57 காலை

நாமக்கல்லில் திருநங்கைகள் தின விழா ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

நாமக்கல் மாவட்ட,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகள் தின விழா மற்றும் சிறப்பு முகாம், மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு பல்வேறு சாதனைகள் புரிந்த 14 திருநங்கைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: திருநங்கைகளும் இந்த சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக ‘தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம், கடந்த 2008-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.

தற்போதைய முதல்வர் ஆட்சியில், திருநங்கைகளின் நலன் காக்கும் வகையில் சமூக பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடியல் பயணத்திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பேருந்து சேவையை மகளிரைப் போல திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 40 வயதிற்கு மேல் உள்ள 50 திருநங்கைகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ சேவை மையம் ஏசி வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது என அவர் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சரிடம் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி, 2 மூத்த திருநங்கைகள், 6 திருநங்கை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர், ஆட்டோ டிரைவர், முதல் திருநங்கை போலீஸ், முதல் திருநங்கை உயர்கல்வி தேர்ச்சி பெற்றவர் என பல்வேறு சாதனைகள் புரிந்த 14 திருநங்கைகளுக்கு, ராஜேஷ்குமார், எம்.பி., சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, தொழிலாளர் துறை உதவி கமிஷனர் இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா உட்பட கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top