நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி இலச்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டு அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார்.
விரைவில் தனியாக செயல்படத் துவங்கும், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இலச்சினை வெளியீட்டு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் உமா புதிய வங்கி லோகோவை வெளியிட்டு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது;
நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 17,26,601 ஆகும். 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட, மொத்தம் 816 கூட்டுறவு சங்கங்கள் இம்மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. 35 மத்தியக்கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் 4 வட்டார அலுவலகங்கள் உள்ளன.
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது, இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அதை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு முதலைமைச்சர் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட 6.3.2024 அன்று அரசு உத்தரவு வெளியிடப்பட்டது.
அதன்பிறகு மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சுமார் ரூ. 1,800 கோடி டெபாசிட்டுகள் மற்றும் ரூ. 1,600 கோடி கடன் தொகையுடன், இந்த வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி தனியாக செயல்படத் துவங்கும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, டிஆர்ஓ சுமன், சிப்காட் தனி டிஆர்ஓ சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




