Close
ஏப்ரல் 23, 2026 11:13 மணி

நாமக்கல் பிரபல வக்கீல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெய்டு

நாமக்கல் திருநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (77), தொழில் அதிபர். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 31ல், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பழனிசாமி வைத்திருந்த, 4 பக்க கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், தனது சாவுக்கு, 4 பேர் காரணம் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட பழனிசாமியின் மனைவி வசந்தா, இவ்வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பழனிசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக, நாமக்கல்லை சேர்ந்த பைனான்ஸ் அதிபர்கள் செல்வராஜ், சேகரன், வக்கீல்கள் அய்யாவு, ஆறுமுகம் ஆகிய, 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், ரூ. 85 லட்சம் மதிப்பிலான நிலத்தை, வக்கீல் அய்யாவு மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டார் எனவும், தன்னுடைய மரணத்திற்கு பின், அவரிடம் இருந்து நிலத்தின் ஆவணங்களை மீட்டு என் மனைவியிடம் வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் பழனிசாமி தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்களை தேடுவதற்காக, வக்கீல் அய்யாவு வீடு, அலுவலகம் உள்பட, 7 இடங்களில், சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., வினோத் தலைமையிலான போலீசார் திடீர் ரெய்டு மேற்கொண்டனர். ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top