Close
மார்ச் 7, 2026 4:57 மணி

அலங்காநல்லூர் அருகே குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலனி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முடுவார்பட்டி ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில், ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதிக்கு நல்ல குடிநீர், மற்றொரு பகுதிக்கு உப்பு கலந்த தண்ணீர் பல மாதங்களாக வழங்கி வருவதாக இந்த பகுதி பழைய காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து, முடுவார்பட்டி ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று காலை 7:00 மணி முதல் முடுவார் பட்டி அலங்காநல்லூர் செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பாலமேடு காவல்துறையினர் சாலை மறியல் செய்து வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதனை ஏற்காத பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .

சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், அலங்காநல்லூர் செல்லும் முக்கிய சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகள் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.

அலங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி இன்று காலை 10 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top