கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி அமைக்க மகளிர் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் டிஆர்ஓ சுமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான கொல்லிமலை பகுதியில், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திடவும், விற்பனை செய்திடவும் மதி அங்காடி மற்றும் விற்பனை மையம் (மதி அங்காடி கியோஸ்க்) அமைத்து நடத்துவதற்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர் சுயஉதவிக்குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகிய குழுவினர் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
மதி அங்காடிக்கு விண்ணப்பிக்கும் குழுவினர், 5 முதல் 8 கி.மீ சுற்றளவில்இருக்கவேண்டும். ஏ அல்லது பி மதிப்பீடு பெற்றிருத்தல் வேண்டும்
மாற்றுத்திறனாளி, விதவை குழு மற்றும் நலிவுற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கண்காட்சி, சாராஸ் மேளா மற்றும் தொழில் கண்காட்சியில் பங்கேற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கடைகள், அங்காடி, விற்பனை நிலையங்கள் நடத்திய அனுபவம் பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சுற்றுலா பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விளக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி அடிப்படையில் மகளிர் சுய உதவி குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




