கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ் குமார் எம்.பி., வழங்கினார்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். வட்டார அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் வரவேற்றார்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக அரசின் வீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டம், விவசாயிகளுக்கு புதிய கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
கொல்லிமலையில் எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் 700 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசின் திட்டங்களை விரைவில் கொண்டு செல்ல, தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை புதிதாக உருவாக்கி. கொல்லிமலை தேவனூர் நாடு ஊராட்சியை சேர்ந்த கனிமொழி காளியப்பன் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதன்மை சுற்றுலாத்தலமாக கொல்லிமலையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்கள் காளியப்பன், பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈஸ்வரன், பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




