Close
மார்ச் 7, 2026 12:09 மணி

நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைக்க முயற்சிக்க வேண்டும்: அண்ணாமலை

இந்தியாவின் வளர்ச்சியில் நாமக்கல், என்ற கருத்தரங்கை, முன்னாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில், இந்தியாவின் வளர்ச்சியில் நாமக்கல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நாமக்கல் சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது. பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தமிழக பாஜ தலைவருமான அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம் தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும், இங்கு லாரி போக்குவரத்து, லாரி பாடி பில்டிங், கோழிப்பண்ணை, விசைத்தறி, ரிக் வண்டிகள் உள்ளிட்ட தொழில்கள் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றன. இம்மாவட்டத்திற்கு ஏற்ற தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவான அறிவு சார் குழுவினை ஏற்படுத்தி, அதன் மூலம் தொழில் அறிக்கையை தயார் செய்து, மத்திய அரசிற்கு அனுப்பி, அனைத்து உதவிகளையும், மானியங்களையும் பெறுவதற்கு வழி வகை செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு தனியார் பங்களிப்புடன், நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், சைனிக் பள்ளிகள் திறப்பதற்கு, மத்திய அரசு 2024 பட்ஜெட்டில் 100 பள்ளிகளை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சைனிக் பள்ளி தொடங்க முன்வரவேண்டும்.

இந்தியாவின் மொத்த ஆயில் தேவையில் 60 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள் உள்ளூர் கொள்கைகள், மத்திய மாநில அரசு திட்டங்கள் மட்டுமல்லாது, சர்வதேச அரசியலின் போக்கை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் தேசிய மற்றும் உலக அளவில் தொழில்களில் போட்டியிட முடியும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 விமான நிலையங்கள் முழுமையாக இயங்குகின்றன. உத்தரபிரதேசத்தில் 13 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. பிற மாநிலங்களில் வளர்ச்சியை பார்த்து நமது மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிந்திக்க வேண்டும். உத்திரபிரதேசத்தில் ராமர் கோவில் மூலமாக சென்ற ஆண்டு ரூ. 22,500 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இந்திய அளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்றது உ.பி. மாநிலம்தான். மத்திய அரசு உடான் விமான நிலையம் அமைத்து, மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது. நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உடன் விமான நிலையம் அமைய நிலவியல் அடிப்படையில் உகந்ததாக உள்ளது. எனவே இப்போது இருந்தே நாமக்கல் மாவட்ட மக்கள் இங்கு உடான் விமான நிலையம் அமைய முயற்சி செய்ய வேண்டும்.

அனைத்து மத்திய அமைச்சர்களையும் நாம் எளிதாக சந்தித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை திட்ட அறிக்கைகளாக வழங்கி, பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான கோரிக்கை மனுக்களை நீங்கள் நமது மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து அல்லது இமெயில் மூலமாக அளித்து பயன்பெற வேண்டும்.

அதேபோல இப்பகுதியில் உள்ள பாஜ நிர்வாகிகளுடன் இணைந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை அளிக்கலாம். உங்கள் கோரிக்கையின்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமனித வருவாய் அதிகரித்து வரும் நாமக்கல் மாவட்டம், மேலும் வளர்ச்சி அடைந்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் அடித்தளமாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், நாமக்கல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், லாரி, கோழிப்பண்ணை, ரிக், விசைத்தறி உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top