தும்மங்குறிச்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால், வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகள் மாநகராட்சி மூலம் துண்டிக்கப்பட்டன.
இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஜேடர்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கபட்ட, குடிநீர் இணைப்பில் குடிநீர் கட்டுப்பாடு வால்வுகளை (ஃபுளோ கண்ட்ரோல் வால்வு) கழற்றி, குடிநீர் பிடித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது.
புகாரின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்யப்பட்டதில், மாநகராட்சி 8ஆவது வார்டு தும்மங்குறிச்சி பகுதியில் சில வீடுகளில், ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை கழற்றிவிட்டு, குடிநீர் பிடிப்பது கண்டறியப்பட்டது. இதையொட்டி அத்தகைய வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள், ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை கழற்றியும், குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்தியும், குடிநீர் உறிஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.




