திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
அமைச்சா் எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:
திருவண்ணாமலை மாநகருக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருகின்ற காரணத்தால், திருக்கோயில் வளாகம், மாடவீதி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் சேகரித்து தூய்மை செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
குப்பைகள் முறையாக சேகரிப்பு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு உயர்மட்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும். மேலும், சேகரிக்கப்படும் குப்பைகளை உரிய முறையில் தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு புதியதாக 6 நுண் உர மையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தினந்தோறும் குடிநீர் வழங்க, தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும்.
மேலும், மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், கிரிவலப்பாதையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கட்டப்பட்டு வரும் பக்தா்களுக்கான கழிப்பறை பணிகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் எனவும், கழிப்பறைகளுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்திடும் பொருட்டு இரண்டு புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளை அமைக்கவேண்டும் எனவும் இந்து சமய அறநிலைத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு மின் விளக்குகள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள மின் விளக்குகள், உயா் கோபுர விளக்குகள் அனைத்தும் முறையாக இயங்குவதை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். இயங்காத பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
மாநகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான திடக்கழிவு மேலாண்மை மற்றும் தடையில்லா சுகாதாரமான குடிநீா் விநியோகம், புதை சாக்கடைப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், மேயா் நிா்மலா வேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம், ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசு துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.




