நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், கடந்த 15.7.2025 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் வரும் செப். 30 வரை வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபம், பள்ளிபாளையம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிள்ளநல்லூர் டவுன் பஞ்சாயத்தில், செங்குந்தர் சமுதாயக் கூடம், மண்டகப்பாளையம் புறநகர் பகுதியில் கிராம பஞ்சாயத்து சேவைமைய கட்டிடம், கொல்லிமலை வட்டாரத்தில் ஆரியூர்நாடு தெம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சந்தைப்பேட்டை செங்குந்தர் மண்டபம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபம் மற்றும் மண்டகப்பாளையம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, மண்டகப்பாளையம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, நாமக்கல் ஆர்டிஓ சாந்தி, வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




