Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

சோழவந்தானில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன உயிர்: புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணி செய்து ஓய்வு பெற்ற சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த நடத்துனர் காந்தி என்பவர் தனது மனைவியை, மேல் நாச்சிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பேருந்தில் அனுப்பி வைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அவரது மனைவி உஷா உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த விபத்திற்கு காரணம் போக்குவரத்து துறை பணியாளர்களோ அல்லது அவசர அவசரமாக பேருந்தில் தனது மனைவியை ஏற்றி விட சென்ற ஓய்வு பெற்ற முன்னாள் நடத்துனரோ இல்லை என்றும், முழுக்க முழுக்க அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சோழவந்தானில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில் பேருந்து நிலையத்திற்கான சர்வீஸ் ரோடு ,பேருந்து உள்ளே வந்து செல்வதற்கு தேவையான ரவுண்டானா
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் சரியாக செய்யாததால், சோழவந்தானில்இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் சோழவந்தான் நகருக்குள் வந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல், சோழவந்தனின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நின்று செல்கிறது.

அந்த வகையில், மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து நிலக்கோட்டை சென்ற அரசு பேருந்து பேருந்து நிலையம் உள்ளே வராமல் மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக வட்ட பிள்ளையார் கோவில் சென்று அங்கிருந்து நிலக்கோட்டை சென்றுள்ள நிலையில் உறவினர் வீட்டிற்கு தனது மனைவியை பேருந்தில் ஏற்றி விட சென்ற ஓய்வு பெற்ற நடத்துனர் வட்ட பிள்ளையார் கோவிலுக்கு பேருந்துக்காக சென்றுள்ளார் .

ஆனால், அங்கிருந்தவர்கள் இப்போதுதான் பேருந்து செல்கிறது என கூறிய நிலையில் அடுத்த நிறுத்தத்தில் சென்று பேருந்தில் ஏற்றி விட தனது இரு சக்கர வாகனத்தில் மனைவியை ஏற்றிக்
கொண்டு சென்றபோது பேட்டை அருகே பேருந்தை ஒட்டி சென்றிருக்கிறார்.

இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரத்தில் அவரின் மனைவியான உஷாவின் தலையின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .

சோழவந்தான் பேருந்து நிலையத்தை திறந்த உடனேயே பேருந்துகள் உள்ளே வந்து செல்ல உரிய நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுத்திருந்தால், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்

அவ்வாறு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் அனைத்தும் வரும் நிலையில் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அனைவரும் பேருந்துக்காக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்

பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராத காரணத்தினால் தான் பொதுமக்கள் பயணிகள் பேருந்துக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாகவே, இந்த விபத்து நடந்து அநியாயமாக ஒரு உயிர் பலியாகி இருக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இனிமேலாவது, அதிகாரிகள் விழித்துக் கொண்டு சோழவந்தானில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக உள்ள பேருந்து நிலையத்தை சோழவந்தானின் புறநகர் பகுதியில் புதியதாக பேருந்து நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது உள்ள பேருந்து நிலையத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்று பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் சோழவந்தான் காவல் நிலையம் அருகில் வைகை ஆற்று பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி அதில் புறநகர் பேருந்து நிலையத்தை அமைத்து அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இதையாவது அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் நடந்து அநியாயமாக அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்க முடியும் என , பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top