Close
மார்ச் 7, 2026 1:25 மணி

நாமக்கல்லில் தேசிய கைத்தறி தின விழா நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தேசிய கைத்தறி தின விழாவில், ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் 50 நெசவாளர்களுக்கு, ரூ. 31.08 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார்.

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் 11வது தேசிய கைத்தறி தின விழா மற்றும் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம், மாநகர மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ராஜேஷ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு கைத்தறிக் கண்காட்சியை துவக்கி வைத்து, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

1905ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக ஆண்டுதோறும், கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டத்தினை வழங்கினார். தற்போதைய முதலமைச்சர் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியத்தினை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கி வருகிறார்.

மேலும் விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750ல் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி, சேலை உற்பத்தி திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டு தேவையான ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

நிகழ்ச்சியில், முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 33 நெசவாளர்களுக்கு ரூ. 16.50 லட்சம் கடனுதவி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ. 13.10 லட்சம் மதிப்பிட்டில் நலத்திட்ட உள்ளிட்ட மொத்தம் 50 நெசவாளர்களுக்கு ரூ. 31.08 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, ராஜேஷ்குமார் எம்.பி., வழங்கினார். துணை மேயர் பூபதிஉள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top