Close
மார்ச் 7, 2026 2:53 மணி

மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்க தமிழக அரசு முடிவு: லாரி உரிமையாளர்கள் கண்டனம்

தன்ராஜ், தலைவர், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்.

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

இந்தியா முழுவதும், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் அன்றாடம் தங்குதடையின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதில் சரக்கு லாரிகளே பிரதானமாக உள்ளன.

இந்த சரக்குகளை பல்வேறு இடர்பாடுகளை கடந்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சாலை வரி, காலாண்டு வரி, பர்மிட் கட்டணம், எப்.சி. கட்டணம், இன்சூரன்ஸ் பிரிமியம் போன்ற வரிகளை முன்கூட்டியே செலுத்தி சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச் அமைக்கப்பட வேண்டும் என்பது நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி. தமிழகத்தில் விதிமுறைகளை மீறி 32 சுங்கச் சாவடிகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, தமிழக சட்டசபையில் 2021-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் மத்திய அரசு இதுவரை சுங்கச் சாவடிகளை அகற்றவில்லை. மேலும், சுங்கச் சாவடிக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசை பின்பற்றும் வகையில், தமிழக அரசு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய பைபாஸ் ரோடுகளான நாமக்கல், எடப்பாடி, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி, கரூர், அருப்புக்கோட்டை, பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதிய சுங்கச் சாவடிகளை அமைத்து, சுங்கக் கட்டணம் வசூலிக்க, 25 ஆண்டுகால குத்தகை அடிப்படையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இச்செய்தி லாரி உரிமையாளர்களாகிய எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைப்பதால் லாரி உரிமையாளர்கள் மேலும் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

மத்திய அரசிடம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில், லாரிகளுக்கும் ஆண்டுக்கொருமுறை கட்டணம் வசூலிக்கவும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் எனவும் ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்டர்ஸ் அசோசியேசன் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி அமைக்கும் முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், மாநில சுங்கச் சாவடிகள் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top