நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி கிராமம் மேலப்பட்டியில், புதியதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், மாரியம்மன். பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் செல்வ விநாயகர், மாரியம்மன், பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிசேக விழா கடந்த புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் கொமாரபாளையம் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதைத் தொடர்ந்து மங்கல இசையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை மங்கள இசை மற்றும் 2 ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிகள் பிரதிஷ்டை, மந்த்ர ஹோமம், வேத பாராயணம் நடைபெற்றது.
நேற்று காலை 6 மணிக்கு மங்கல இசை, கோ பூஜை, பூர்வாங்கம் மற்றும் 4ம் கால யாக சாலை பூஜைகள் மகா மஹாபூர்ணாஹீதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, செல்வ விநாயகர், மாரியம்மன், பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி மூலவர்களுக்கு கும்பாபிசேகம் நடைபெற்று, மகா தீபாரதணை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.




