கொல்லிமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட 4-வது மாநாடு கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மூத்த தலைவர் ஆண்டி கொடியேற்றினார். மாவட்ட துணை தலைவர் மாணிக்கம், மூத்த தலைவர்கள் வெள்ளையசாமி, ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். முன்னாள் அரூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவருமான டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.
செயல்பாட்டு அறிக்கையை மாவட்ட செயலாளர் சின்னசாமி வாசித்தார். மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்து சங்கத்தின் கொல்லிமலை தாலுகா செயலாளர் பழனிசாமி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாநில பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் பேசினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- 2006 வன உரிமைச் சட்டப்படி, பழங்குடி அனைத்து பகுதி மக்கள் அனுபவத்தில் உள்ள வன நிலங்களுக்கு உரிமை சான்று வழங்க வேண்டும்.
- கொல்லிமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
- ரீ-சர்வே குளறுபடிகளை சரி செய்து பின்னரே ஆன்லைனில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மலைவாழ் மக்களின் நிலங்களை, பழக்குடியினர் அல்லோர் வாங்கினால் செல்லாது என்ற அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
- மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் காலதாமதமின்றி வழங்க வேண்டும்
என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கொல்லிமலை தாலுகா தலைவர் ரேவதி நன்றி கூறினார்.




