நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் சாலை பாதுகாப்பு மன்றம், உள் தர உறுதி மையம் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
சேலம் ரயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கோயா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், ரயிலில் பயணம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள், ரயில்வே சேவையை, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பவை குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் கரூர் நாயுடு, நாமக்கல் குமரசேன், துணை உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் ராஜசேகர பாண்டியன், பொருளியல் துறைத் தலைவர் மாதவன், சாலை பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் கார்த்திக், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் செய்திருந்தார்.




