Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

மாநில அளவில் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

திருந்திய நெல் சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

2025-26-ஆம் ஆண்டிற்கான உயரிய தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து, திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு, ரூ. 5 லட்சம் சிறப்பு பரிசும், ரூ. 7,000 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிக்கு, குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ வைத்து, திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.

மேலும், பயிர் விளைச்சல் போட்டியில் குறைந்தபட்சம், 50 சென்ட் பரப்பு நெற்பயிர், நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பதிவு கட்டணமாக, ரூ.150 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும்.

வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் தலைமையிலான, மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது.

மேலும், விவரத்தினை பெற தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top