திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் பெற இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்டிகைக்கால பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் வழங்கப்படுவதன் பேரில் வெடிபொருள் பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று அரசால் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வருட தீபாவளி பண்டிகை அக்.20 ஆம் தேதி அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையல் வெடிபொருள் பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது கீழ்கண்ட ஆவணங்களை தவறாமல் இணைக்க வேண்டும்.
- கடை அமைவிடத்திற்கான சாலை வசதி கொள்ளளவு இரண்டு வழிகள், சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான நீல வரைபடம் 6 நகல்கள்
- கடைவைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த கட்டடமாக இருப்பின் அதற்கான உரிய ஆவணம் (அ) வாடகை கட்டடமாக இருப்பின் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம்,
- தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ.600 எஸ்பிஐ வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான்,
- இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை வாக்காளர் அட்டை குடும்ப அட்டை)
- தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோரும் கட்டடத்திற்கான சொத்து வரிரசீது,
- தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோரும் விண்ணப்பத்தாரர் பாஸ்போர்ட புகைப்படம் 2,
உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமலும் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் அளித்தால், ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
வெடிபொருள் சட்டம் 2008 விதி எண்.106ன் படி உரிமத்தின் காலம் 30 நாட்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பத்தாரர்கள் 10.10.2025 வரை இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
மேற்குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஆன்லைனில் இசேவையங்கள் மூலமாகவும் மற்றும் அஞ்சல் நேரடியாகவோ மேற்படி தீபாவளி பண்டிகை 2025-க்கான உரிமம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் நிரந்தர பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி பொருந்தாது என தெரிவித்துள்ளார்.




