நாமக்கல் நாமகிரி தாயார் கோயிலில் நவராத்திரி விழா வருகிற 22ம் தேதி திங்கள்கிழமை துவங்கி அக். 2ம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது.
நாமக்கல் கோட்டையில், ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்புறத்தில் பிரசித்திபெற்ற நாமகிரித் தாயார் உடனுறை நரசிம்மர் சாமி கோயில் அமைந்துள்ளது. நாமகிரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 22ம் தேதி திங்கள்கிழமை துவங்கி அக். 2ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் காலை 8 மணிக்கு அரங்கநாயகித்தாயார் பேட்டை திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலா நடைபெறும். தினசரி இரவு 7 மணிக்கு நரசிம்ம சுவாமி, ஒவ்வொரு அவதாரத்தில், நாமகிரித்தாயார் சன்னதியில் எழுந்தருளி, மகா தீபாராதனை நடைபெற்று, கொலுமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். தினசரி மாலை 6 மணிக்கு லட்சுமிநாராயணர் சன்னதி முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நவராத்திரி முதல் நாள் செப். 22ம் தேதி நரசிம்மர் மச்சாவாதராத்தில் காட்சியளிப்பார். 23ம் தேதி கூர்மாவதாரம், 24ம் தேதி வாமனாவதாரம்,
25ம் தேதி ரங்கமன்னார் திருக்கோலம், 26ம் தேதி ராமாவதாரம், 27ம் தேதி கிருஷ்ணாவதாரம்,
28ம் தேதி பரமபதநாதர் அவதாரம், 29ம் தேதி மோகன அவதாரம், 30ம் தேதி ராஜாங்க சேவை நடைபெறும்.
அக். 1ம் தேதி, இரவு 7 மணிக்கு, அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் கமலாலயக் குளக்கரையில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
அக். 2ம் தேதி விசேஷ திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்புரிவார். விழாவை முன்னிட்டு, நாமகிரித்தாயார் கொலு மண்டபத்தில் நவராத்திரி கொலு நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா, ரமேஷ்பாபு ஆகியோர் செய்துள்ளனர்.




