Close
மார்ச் 7, 2026 4:41 மணி

சோழவந்தானில் , திமுக அதிருப்தி கவுன்சிலர்களால் பேரூராட்சி பணிகள் பாதிப்பு: அதிகாரிகள் புலம்பல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் திமுக 12 அதிமுக 6 என கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சியின் 1.2 மற்றும் 14 ஆகிய வார்டு திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை என பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட திமுக 3 பெண் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அவர்களது கணவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து செயல் அலுவலர் மற்றும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சித் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் திமுக அதிருப்தி கவுன்சிலர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இது குறித்து, அங்கிருந்த மற்ற கவுன்சிலர்கள் கூறுகையில் ,கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சோழவந்தான் பேரூராட்சியில் திமுகவிற்கு 8 அதிமுகவிற்கு 6 சுயேச்சை 4 என வெற்றி பெற்ற நிலையில் பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக கைப்பற்றுவதற்கு மேலும் இரண்டு கவுன்சிலர்கள் ஆதரவு தேவைப்பட்டது.

இந்த நிலையில், 9வது வார்டு கவுன்சிலர் சத்யபிரகாஷ் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அவருக்கு பேரூர் திமுக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் மருது பாண்டியன் 13வது வார்டு கவுன்சிலர் வள்ளிமயில் மணி முத்தையா ஆகிய சுயேச்சை கவுன்சிலர்களும், அடுத்தடுத்து திமுகவில் இணைந்ததால், திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

பேரூராட்சி தலைவராக எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவராக லதா கண்ணன் பணி நியமன குழு உறுப்பினராக திமுகவில் சேர்ந்த ஈஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பேரூராட்சி பணிகள் நடைபெற்று வந்தது.

அப்போது, திமுகவுக்கு ஆதரவு அளித்த 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரியின் கணவர் ஸ்டாலினுக்கு பேரூர் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் , அதில் திருப்தி அடையாத அவர் 1 .2 மற்றும் 14வது வார்டு திமுக கவுன்சிலர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பேரூராட்சி கூட்டங்களில் பேரூராட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் .

இதன் காரணமாக, பேரூராட்சியின் மற்ற வார்டுகளில் நடைபெறும் பணிகளும் பாதிக்கப்பட்டதாக அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் மக்கள் பணிகளுக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் தரப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து , ஒரு சில மாதங்கள் பேரூராட்சி பணிகள் சுமூகமாக நடைபெற்ற நிலையில் பேரூராட்சி கூட்டத்திற்கு வருகை தந்த திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்து செல்வி நிஷா ஆகியோர் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை என்று கூறி, பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலரின் கணவர்கள், பேரூராட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து கொண்டு அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலரின் கணவர்களுக்கு அலுவலகத்தில் என்ன வேலை என வெளியில் இருந்த பொதுமக்கள் கூறிவந்த நிலையில் அதனை பொருட்படுத்தாத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று திமுக பெண் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அலுவலகத்திற்குள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பேரூராட்சிகளின் மற்ற வார்டுகளிலும் அடிப்படை பணிகள் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தில் மற்ற வார்டு கவுன்சில்களின் ஆதரவுடன் பேரூராட்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து , அதிமுக உள்ளிட்ட மற்ற கவுன்சிலர்கள் கூறுகையில், திமுகவின் உள்கட்சி பிரச்சனையால் எங்களை நம்பி வாக்களித்த வார்டு பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.

தொடர்ந்து, செயல் அலுவலரிடம் இதுகுறித்து பலமுறை முறையிட்டு உள்ளோம் அவரும் இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சோழவந்தான் வெங்கடேசன், அமைச்சர் மூர்த்தி ஆகியோரிடத்தில் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இருந்தாலும், அதிமுகவின்.6 கவுன்சிலர்களின் வார்டுகளில் மக்கள் பணிகளை தொய்வின்றி செய்வதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், பேரூராட்சியில் அடிக்கடி ஆய்வு செய்து வார்டுகளில் பணிகள் தாமதமின்றி நடைபெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

இது குறித்து பேரூராட்சி பணியாளர் கூறுகையில், திமுகவின் உள்கட்சி பிரச்சனையால் மற்ற வார்டுகளிலும் மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது. ஆகையால், திமுக அரசு இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சோழவந்தான் பேரூராட்சியில் , மாவட்ட ஆட்சியர் மூலம் உரிய கவனம் செலுத்தி மக்கள் பணிகள் தங்கு தடை இன்றி நடைபெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.

சோழவந்தான் பேரூராட்சியில், மொத்தம் உள்ள 18 கவுன்சிலர்களில் திமுகவிற்கு தற்போது 12 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அதில் மூன்று கவுன்சிலர்கள் திமுக எதிர்ப்பு நிலை எடுத்து உள்ளனர் இதனால் பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் 9 உறுப்பினர்களே உள்ளனர்.

ஆகையால், சோழவந்தான் பேரூராட்சியில் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக கவுன்சிலர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top