மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளைக் கட்டிக்கொண்டு, விவசாயிகள் நூதன முறையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 882 ஏக்கர் பரப்பளவில், தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க கூடாது என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர் உள்ளிட்டோர் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தொடர்ந்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிப்காட் திட்டத்திற்கான போலி அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விளைநிலங்களை அழிக்கக்கூடாது என கோஷம் எழுப்பினர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு நூதன முறையில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.




