திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதியை முறையாக செலவு செய்ய வேண்டும், கிராமப்புறங்களில் மழை நீர் கட்டமைப்புகள் இருக்க வேண்டும், டெங்கு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும், கல்வெட்டு மற்றும் சாலை செப்பனிடும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.
இரண்டு ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ள கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் ஜாதி அடையாளத்துடன் இருக்கின்ற பெயர்களை மாற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு அழகானந்தல் கிராமத்தில் உள்ள இரண்டு அருந்ததி நகர், ஆதி திராவிடர் நகர் என்கிற இரண்டு நகரின் பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி தந்தை பெரியார் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் என புதிய பெயரை சூட்டினார்.
தொடர்ந்து ஓரிரு தினங்களில் புதிய பெயர் பலகைகள் வைக்கப்படும் என தெரிவித்த அவர், உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்கிற உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், திட்ட இயக்குநர் மணி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




