வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை (எஸ்ஐஆர்) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவைலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 4ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பணி டிசம்பர் 4 வரை நடைபெறவுள்ளது.
இப்பணிகளில், அங்கன்வாடி பணியாளர்கள், எழுத்தர் பணியாளர்கள் (நகர்புறம்), ஒப்பந்த ஆசிரியர்கள், மதிய உணவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், ஆசிரியர்கள், விஏஓக்கள், கிராம அளவிலான பணியாளர்கள் என மொத்தம் 1,629 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரங்கோலி கோலப் போட்டி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார். காவல் கண்காணிப்பாளர் விமலா, டிஆர்ஓ சரவணன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, ஆர்டிஓக்கள் நாமக்கல் சாந்தி, திருச்சேங்கோடு லெனின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




