உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உர விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உர உரிமம் புதுப்பிக்காமலோ, விற்பனை விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரங்கள் விற்பனை செய்வது கண்டறிந்தால் கடையின் உர உரிமம் ரத்து செய்யப்படும். யூரியா உரங்கள் விற்பனை செய்யும்போது விவசாயிகள் முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் ரசீது கொடுக்க வேண்டும். அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே உரங்களை வைத்திருக்க வேண்டும்.
விவசாயிகள் யூரியா உரத்தை அதிகபட்சமாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 2 மூட்டைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரங்களை அருகாமையில் உள்ள மாவட்டத்திற்கு விற்பனை செய்தாலோ, கடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில்லறை உர விற்பனை நிலையங்களில் உரங்கள் மற்றும் பூச்சிமருந்து எம்ஆர்பியை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




