நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் விவசாய சங்கங்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் பொதுவான குறைகளை தொகுத்து, அனைத்து விவசாயிகளின் சார்பில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேரடியாக தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் பட்டியல்களை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களை பட்டியலில் சேர்த்திடும் வகையில், சங்கங்களின் விபரங்களை, நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும், தங்களது சங்கத்தை பதிவு செய்யக்கோரும் கடிதத்தில், சங்க முத்திரை, பெயர், பதிவு எண், முகவரி, பதிவு விபரம், புதுப்பிக்கப்பட்ட விபரம், சங்க நிர்வாகிகள் விபரம், புகைப்படம், சங்க உறுப்பினர்கள், நில உடமை விபரம், சிறு, குறு, இதர விவசாயி போன்ற விபரங்களுடன் சங்க முத்திரைக் கடிதத்தில், வரும், 20க்குள், நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலகத்தில், நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பித்து, விவசாய சங்கப் பட்டியலில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு பதிவு செய்யும் சங்கங்களுக்கு மட்டுமே, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாய சங்கப் பட்டியலில், முன்னுரிமை வழங்கப்படும். பதிவு செய்யப்படாத சங்கங்கள், தனிநபர் என்ற முறையில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
ஏற்கனவே விவசாய சங்கப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் புதிய சங்கங்கள், தங்களது சங்கத்தை மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



