திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலை அருகே 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு டீசல் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது, அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் என்பவர் சாலையை கடக்க முயன்றார். மூதாட்டி மீது லாரி மோதாமல் இருக்க திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், டேங்கரில் இருந்து வழிந்து ஓடிய மற்றும் சாலையோரம் தேங்கி நின்ற டீசலை பிளாஸ்டிக் கேன் மற்றும் குடங்களில் எடுத்துச்சென்றனர்.
ஆபத்தை உணராமல் டீசல் சேகரிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
எதிர்பாராமல் தீப்பற்றினால், டேங்கர் லாரி வெடித்துச் சிதறும் என்ற ஆபத்தை உணராமல் டீசலை எடுத்துச்சென்றது அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




