அமெரிக்காவிலிருந்து பிரபல ரவுடி அன்மோல் பிஷ்னோய் மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் மூலம், முக்கியக் குற்றவாளிகளை வெளிநாட்டிலிருந்து நாடு கடத்துவதில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களின் விமானம், இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிக் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய்யின் தம்பியான அன்மோல் பிஷ்னோய், இந்தியா முழுவதும் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.
இதில், 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு மற்றும் ஏப்ரல் 2024-ல் நடிகர் சல்மான் கான் இல்லம் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகியவை அடங்கும். இந்தச் சம்பவங்களின் முக்கியக் சதித்திட்டத்தை வெளிநாட்டிலிருந்து அன்மோல் பிஷ்னோய்தான் வழிநடத்தியதாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 2022-ல் அன்மோல் பிஷ்னோய் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். ரஷ்ய ஆவணங்களைப் பயன்படுத்தி அவர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையே பயணித்துள்ளார்.
கலிபோர்னியாவில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட அன்மோல், பின்னர் கண்காணிக்க வசதியாக காலில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வளையம் அளிக்கப்பட்டு, நீதிமன்றக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இவர் லூசியானாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சீஷான் சித்திக், அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவிலிருந்து “வெளியேற்றப்பட்டதை ” மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அன்மோல் இந்தியா வந்திறங்கியதும் அவரை உடனடியாக கைது செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்மோலை காவலில் எடுப்பதற்கு மும்பை காவல்துறை ஏற்கெனவே இரண்டு முறை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தேசியப் புலனாய்வு முகமை மற்றும் மும்பை காவல்துறை போன்ற இந்தியப் புலனாய்வு அமைப்புகளில் எந்த அமைப்பு முதன்முதலில் அன்மோலை காவலில் எடுக்கும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும்.

