Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

வைகுண்ட ஏகாதசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்ட பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்கள் அக்னிஸ்தலமாக  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 5.18 மணி அளவில் மேளதாளங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாயில் திறக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் கற்பூர ஆரத்தியுடன் முதலில் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஆன்மீக பொதுமக்கள் என வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அண்ணாமலையார் கோயிலில் குவிந்திருந்தனர். சைவ ஸ்தலங்களில் மிக முக்கியமான கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் வைகுண்ட வாயில் திறப்பது ஐதீகம் ஆகும்.

பூத நாராயணன் பெருமாள்

திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதேபோல உற்சவர் பூத நாராயணன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

ஆரணி, சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல உற்சவர் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலையில் ராஜகோபுரத்தில் உள்ள சொர்க்க வாசல் வழியாக சாமி வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

போளூர்

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்ம பெருமாள், கருடாழ்வார், அனுமன், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் தாயார் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் செய்து, ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டர் கற்பூர ஆராதனை செய்தார். பின்னர் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

முன்னதாக கோவிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

பூத நாராயணன் பெருமாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top