Close
மார்ச் 7, 2026 4:40 மணி

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருதை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

திருவண்ணாமலையில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதுகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் கிரி,  சரவணன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை – செங்கம் சாலை மண்மலை பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த கடன் சங்கத்தில் அதிகளவில் விவசாயிகள் உறுப்பினராகவும், வாடிக்கையாளராகவும் இருந்து வருகின்றனா்.

இந்தக் கூட்டுறவு சங்கத்தில் கிராமப்புற பெண்களுக்கு மகளிா் சுய உதவிக்குழு கடன்கள், விவசாய கடன்கள், தனிநபா் கடன், தங்க நகை மீது கடன் போன்றவை தினசரி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடன் பெற்ற நபா்களை வங்கி ஊழியா்கள் கண்காணித்து அவா்களிடம் இருந்து உரிய நேரத்தில் கடனை திரும்பப் பெறுதல் மீண்டு அவா்களுக்கு கடன் வழங்குதல் போன்ற பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனா்.

மேலும், ஆண்டுதோறும் வங்கி உறுப்பினா்களுக்கு லாப ஈவுத்தொகையை வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்மாதிரி வங்கியாகவும், மாநில அளவில் சிறந்த வங்கியாகவும் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் அனைத்திலும் சிறப்பாக செயல்படும் செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தொடா்ந்து 24 ஆண்டுகளாக தோ்வு செய்து அதற்கான விருதை தமிழக அரசு கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கி வருகிறது.

24 ஆண்டு சிறந்த வங்கிக்கான விருதை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். தொடர்ந்து கூட்டுறவு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கூட்டுறவு மாவட்ட பதிவாளா், மாவட்ட துணைப் பதிவாளா்கள் உள்ளிட்ட கூட்டுறவு மண்டல, மாவட்ட இணை இயக்குநா்கள், கூட்டுறவு சங்கச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை வேங்கிக்கால் திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய சுயசேவை பிரிவு விற்பனை நிலையத்தை அமைச்சா் எ.வ.வேலு , திறந்து வைத்து பார்வையிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top