ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, ஈரோட்டில் இருந்து, நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் மத்திய ரயில்வே துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது, இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என கேட்டார்.
இதற்கு பதில் அளித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல், தாத்தையங்கார்ப்பேட்டை, துறையூர், பெரம்பலூர் வழியாக அரியலூர் வரை 108 கி.மீ தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கான கள ஆய்வு (ஃபீல்டு சர்வே) நிறைவடைந்து, விரிவான திட்ட அறிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதை அமைக்கும் திட்டத்திற்கான விரிவான செயல்திட்டம், தற்போது மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தத் திட்டம் நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் மதிப்பீட்டிற்காக அனுப்பி வைக்கப்படும்.
தற்போதைய நிலையில், அரியலூர் டூ ஈரோடு இடையே ஏற்கனவே திருச்சி மற்றும் கரூர் வழியாகச் செல்லும் ஒரு ரயில் வழித்தடம் செயல்பாட்டில் உள்ளது. புதிய பாதை திட்டம்: பெரம்பலூர் வழியாக அரியலூர் மற்றும் நாமக்கல் இடையே 108 கி.மீ தொலைவிற்கான புதிய ரயில் பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.




