நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனருமான ஆசியா மரியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், உங்களுடன் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து, அதிகாரிகள் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும்.
துறை அலுவலர்கள் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடித்திட வேண்டும். தொடர்ந்து கள ஆய்வு செய்து ஏதேனும் தொய்வு இருப்பின் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




