நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,014 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 7.98 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
லோக் அதாலத் மூலம் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலாவது அமர்வில், நீதிபதிகள் முனுசாமி, சச்சிதானந்தம், செகனாஸ்பானு, இரண்டாவது அமர்வில், நீதிபதிகள் சண்முகபிரியா, மகாலட்சுமி, தங்கமணி ஆகியோர் வழக்குகளை விசாரணை நடத்தினர்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய அளவிலான லோக் அதாலத்தில், சார்பு நீதிபதி வேலுமயில் மேற்பார்வையிட்டார். அதில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், பேங்க் செக், குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய நீதிமன்றங்களில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 3,520 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,014 வழக்குகள், ரூ. 7 கோடியே, 98 லட்சத்து, 58 ஆயிரத்து 214 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத் வழங்கும் தீர்ப்பின் மீது அப்பீல் செய்ய இயலாது. வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற வேறுபாடு இல்லாது சமரச முறையில் தீர்வு காணப்படுகிறது.




