நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 8-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப்பணி இன்று முதல் 21 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,80,600 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு தங்கள் கால்நடைகளை கொண்டு சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இத்தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்வார்கள். விவசாய பெருமக்கள், 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை முகாமிற்கு அழைத்துச் சென்று தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.




