Close
மார்ச் 7, 2026 2:51 மணி

நாமக்கல்லில் வரும் 5ம் தேதி உலகம் உங்கள் கையில் விழா: அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வர் தலைமையில், சென்னை வர்த்தக மையத்தில், உலகம் உங்கள் கையில் என்ற தலைப்பில், மாநில அளவில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான, விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, வரும் 5ம் தேதி நடக்கிறது.

அதில், இளைஞர் மேம்பாடு, மாநிலத்தின் மேம்பட்ட அறிவியல் மனப்பான்மை உள்ளடக்கிய தன்மை மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முதன்மை திட்டங்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

விழாவில், கல்லூரி மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சி, வரும் 5ம் தேதி, பகல், 2:30 முதல், இரவு 8:30 மணி வரை, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது.

விழாவில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர் என்று கூறினார்

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top