வருகிற 29ம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜவுளித் தொழில் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளலாம்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு வருகிற 29 மற்றும் 30 ஆகிய 2 நாட்கள் கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் நெ. 1 டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றும் வகையில் தமிழக முதல்வர் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இந்த இலக்கை அடைய ஜவுளி தொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில், கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும், சுமார் 100 அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் வருகிற 13ம் தேதிக்குள் கரூர் மண்டல துணை இயக்குநர் அலுவலக இமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்று பயன் பெறலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு கரூரில் இயங்கி வரும் மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.




