திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், மக்களவை உறுப்பினா்கள் அண்ணாதுரை, தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிரி, சரவணன், ஜோதி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு, திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 27.01.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை மாநகராட்சியில் இந்த புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்றைய தினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், கும்பகோணம், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூா், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, மணலூா்பேட்டை ஆகிய வழித்தடங்களில் பேருந்துக்கள் இயக்கப்படும்.
மேலும் புறநகர பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக துவக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.
மத்திய பேருந்து நிலையத்தில்
இதுதவிர சேத்துப்பட்டு, மேல்மலையனூா், வந்தவாசி போளூா், வேலூா், ஆற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், செங்கம், சேலம், கோவை, பெங்களூரு, தருமபுரி, ஒசூா், திருப்பத்தூா், காஞ்சி, மேல்சோழங்குப்பம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல இயக்கப்படும்.
புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா்.
அதற்காக திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றன. பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த 27.12.2025 அன்று தமிழக முதல்வரால் இந்த புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தில் 74 கடைகள், 2 உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி ஓய்விடங்கள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்
ஒரே நேரத்தில் 54 பேருந்துகளை நிறுத்தும் வகையில் நடைமேடைகள் உள்ளன. இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு, மொத்தம் 100 பேருந்துகள் வரை நிறுத்த முடியும்.
சுமார் 200 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க நவீன இருக்கைகளுடன் கூடிய விசாலமான காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைகள் மற்றும் உணவகங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கெனத் தனி பாலூட்டும் அறை வசதி செய்யப்பட்டுள்ளது
நவீன கழிப்பறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்களைத் தரும் மின்னணுத் திரைகள் மற்றும் ஒலிபெருக்கி வசதிகள் உள்ளன.
பயணிகள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தப் போதுமான இடவசதி உள்ளது.
புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் அருகே செயல்பாட்டிற்கு வந்திருப்பதால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களால், திருவண்ணாமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வரும் நிலையில், இந்த பேருந்து நிலையம், போக்குவரத்து நெரிசலில் இருந்து தீர்வு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




