நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் திருத்தப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் குல்திப் நாராயண் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், 6,17,269 ஆண் வாக்காளர்கள், 6,55,490 பெண் வாக்காளர்கள், 195 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 12,72,954 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 335 சேவை வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக, ஊரக பகுதியில் 1,089, நகர்ப்புற பகுதியில் 691 என, 1,780 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஒரு சட்டசபை தொகுதிக்கு, 20 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,780 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 180 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்கள் ஓட்டுப்பதிவு இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைத்து நபர்களும் சேர்த்தல், தவறுகள் நீக்குதல், பொதுமக்களின் மனுக்கள் சரியான முறையில் பரிசீலித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் கமிஷன் பார்வையாளர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், கூடுதல் டிஆர்ஓ கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




