Close
மார்ச் 7, 2026 12:09 மணி

நாமக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் துர்கா மூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார்

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் துர்கா மூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தனார். அருகில் அருகில் எஸ்.பி. விமலா.

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா ஆகியோர் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.

பின்னர், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவர்களது வாரிசுதாரர்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

சிறந்த முறையில் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்திய போலீசார் மற்றும் ஊர் காவல் படையினரை பாராட்டி பரிசு வழங்கினார். மாவட்ட அளவில், சிறப்பாக பணியாற்றிய 52 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 33 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 281 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ. 64 லட்சத்து 56 ஆயிரத்து 313 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாமக்கல் போலீஸ் எஸ்.பி. விமலா, டிஆர்ஓ சரவணன்உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top