அரசு அனுமதி இல்லாமல், தனியார் நிலங்களில் பனை மரங்களை வெட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருட்கள் தரக்கூடியதாகவும், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவக்கூடியதாகவும், மண் வளம் மற்றும் நீர் சேமிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் 3 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு 3 ஆண்டுகளாக பனை மேம்பாட்டு இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் தனியார் நிலங்களிலும் பனை மரங்களை வெட்டக்கூடாது என்ற அரசு உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட பனைமரத்தினை செங்கல் சூளை, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு அழித்து வருவதால் அதை தடுக்கும் வகையில், பனை மரங்கள் வெட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி முதலில் உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிறகு வட்டார மற்றும் மாவட்ட கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெறுதல் வேண்டும். அவ்வாறு வெட்டப்படும் மரத்திற்கு ஈடாக ஒரு பனை மரத்திற்கு 10 பனை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வெட்டப்பட்ட மரத்தினை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு எடுத்து செல்லும்போது அனுமதி கடிதத்தை காண்பிக்வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு உரிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். அனைத்து பாகங்களும் பயன்தரும் பனைமரத்தினை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.




